தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் பல்வேறு போட்டிகள்
1 min read
Various competitions at Tenkasi District Central Library
18.12.2024
தென்காசி மாவட்ட மைய நுாலகத்தில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி வைத்தல், கருத்தரங்கம், மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தென்காசி மாவட்ட மைய நுாலகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் மற்றும் போட்டிகள் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை கடந்த 2000 ஜனவரி 1-ம் தேதி அன்றைய தமிழக முதல்வர் கலைஞரால் நிறுவப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் அதற்கான வெள்ளி விழாவை கொண்டாடுமாறு முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
பொது நுாலகத்துறையில் அனைத்து மாவட்ட மைய நுாலகத்திலும் வெள்ளி விழாவை, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்காசி மாவட்ட மைய நுாலகத்தில் வரும் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை திருக்குறள் விளக்க புகைப்பட கண்காட்சி வைத்தல், கருத்தரங்கம், மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் மற்றும் பேச்சுப்போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
மாணவ, மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல், விநாடிவினா மற்றும் பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000/-, 2-ம் பரிசாக ரூ.3,000/-, மூன்றாம் பரிசாக ரூ.2,000/- வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தென்காசி மாவட்ட மைய நூலக அலுவலக (04633-225143) எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.