June 22, 2026

Seithi Saral

Tamil News Channel

அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டி.ஜி.பி. உத்தரவு

1 min read

Armed police security in all courts – DGP orders

22.12.2024
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட கோர்ட்டு உள்ளது. இந்த கோர்ட்டுக்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக அங்கு வந்துள்ளார்.
அப்போது கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி வருகைக்காக காத்திருந்தபோது திடீரென 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று மாயாண்டியை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக கும்பலிடம் இருந்து தப்பித்து கோர்ட்டு வளாகத்தில் ஓடினார். இருப்பினும் அந்த கும்பல் மாயாண்டியை துரத்தி சென்றது. கோர்ட்டு வளாகத்தில் இருந்து வெளியே வாசலுக்கு வந்தபோது மாயாண்டியை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் முகம், கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி சரிந்து விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாயாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை ஐகோர்ட்டு, நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தும் கொலை நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை? ஒரு குற்றம் நடைபெறும் பொழுது அதை தடுக்க முயல வேண்டுமே தவிர, குற்றம் நடந்த பிறகு குற்றவாளிகளை தேடுகிறோம் என்று சொல்வதில் என்ன நியாயம் உள்ளது’ என்றார். அப்பொழுது அரசு தரப்பு வழக்கறிஞர், ‘இந்த கொலை சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை தேடி வருவதாகவும் தெரிவித்தார்.
அதற்கும் பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். ‘சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பி ஓடாமல் அவர்களை முட்டிக்கு கீழே காலில் சுட்டுப் பிடித்திருக்கலாம். இல்லையென்றால் அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற வாகனத்தின் டயர்களை சுட்டு நிறுத்தி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் சம்பவ இடத்திலேயே குற்றவாளிகளை அங்கேயே கைது செய்திருக்கலாம். தமிழகம் முழுவதும் மாவட்ட கோர்ட்டுகள் அனைத்திலும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அது கடைபிடிக்கப்பட வேண்டும். நாளை நீதிபதிக்கும் இதேபோன்ற ஒரு நிலை ஏற்பட்டால் நீங்கள் இப்படித்தான் வேடிக்கை பார்ப்பீர்களா?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தது.
இந்நிலையில் நெல்லை கோர்ட்டு அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கைத்துப்பாக்கி, நீண்ட தொலைவில் குறி வைத்து சுடும் துப்பாக்கிகளை வைத்திருக்கவும், இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *