விடுமுறை: குற்றாலம் மெயின் அருவியில் கூட்டம்
1 min read
Holiday: Crowd at Courtallam Main Falls
22.12.2024
தென்காசி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 12ம் தேதிபெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அருவிக்கரைகள் சேதமடைந்தன. மேலும் வெள்ளம் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதனை தொடர்ந்து ஐந்தருவி, புலியருவியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் அருவியின் ஓரமாக நின்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி தற்போது குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு சீராக வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தையொட்டி குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிகிறது. கொளுத்தும் வெயிலில் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவியில் உற்சாகக் குளியல் போட்டு வருகின்றனர்.