June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

எம்ஜிஆர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

1 min read

Edappadi Palaniswami pays tribute at MGR memorial

2.12.2024
அ.தி.மு.க.வின் நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் எம்ஜிஆரின் 37-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அதிமுக சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் எம்ஜிஆரின் சிலைக்கு கட்சியினர் மரியாதை செலுத்தினர். மேலும், எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் திரளான கட்சித் தொண்டர்கள் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளத்தில், ” நூற்றாண்டு கால திராவிட இயக்கத்தின் கொள்கைகளை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த பேரலை, அண்ணா விட்டுச் சென்ற திராவிடக் கனவை ஏந்தி நின்று, மக்களுக்கான இயக்கமாம் அதிமுக கண்டு, அனைவரும் அனைத்தும் பெறும் நல்லாட்சிக்கான இலக்கணம் வகுத்த நம் ஒப்பற்ற தலைவர்,
ஒப்பாரும் மிக்காரும் இல்லாத திராவிட நாயகர், நம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நினைவு நாளான இன்று, மக்கள் உள்ளங்களில் இன்றும் வாழும் நம் உயிர்நிகர் தலைவரின் பெரும்புகழைப் போற்றி வணங்கி, புரட்சித்தலைவர் அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் அமைத்திட உறுதியேற்போம்!” என்று அதில் பதிவிட்டிருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *