மாணவி பாலியல் வன்கொடுமை: சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை
1 min read
Student sexual assault: Chennai High Court takes suo motu action
27.12.2024
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு படித்த என்ஜினீயரிங் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் 8 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவாளி ஞானசேகரன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில், வெகுவிரைவில் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அவருக்கு அதிகபட்ச தண்டனையை வாங்கி தருவதற்காக போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். அதற்காக, தனி போலீஸ் படை ஒன்று தீவிரமாக செயலில் இறங்கி உள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததுள்ளது. பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் அளித்த கடிதத்தின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
வழக்கு தொடர்பாக உள்துறை செயலாளர், டிஜிபி, காவல் ஆணையர், அண்ணா பல்கலை. துணைவேந்தர், பதிவாளர், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தரப்பில் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.