அண்ணா பல்கலைக்கழகத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் ஆய்வு
1 min read
Governor R.N. Ravi personally inspects Anna University
28.12.2024
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்துள்ளனர். இந்த பாலியல் பலாத்கார விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
இந்த நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பல்கலைக்கழக பேராசிரியர்களை சந்தித்து பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து 25 மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கவர்னர் கேட்டறிந்தார்.
கவர்னர் வருகையை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த ஆய்வின்போது தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்ப கல்வித்துறை ஆணையர் ஆபிரகாம், பல்கலைக்கழக பதிவாளர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.