தஞ்சை துணைவேந்தர் – பதிவாளர் மோதல்; பூட்டு உடைத்து பொறுப்பேற்றார் புதிய பதிவாளர்
1 min read
Thanjavur Vice Chancellor-Registrar clash; New Registrar takes charge by breaking the lock
30.12.2024
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தர் மற்றும் பொறுப்பு பதிவாளரிடையே ஏற்பட்ட மோதலில், பதிவாளர் அறையின் பூட்டு உடைக்கப்பட்டது.
கடந்த 2018-19ம் ஆண்டு நடந்த பேராசிரியர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக துணைவேந்தருக்கு புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்தி வரும் நிலையில், அப்போதைய துணைவேந்தராக இருந்த பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, திருவள்ளுவன் துணைவேந்தராக செயல்பட்டு வந்தார். நியமன முறைகேடு புகாரை முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, துணைவேந்தர் திருவள்ளுவன் கவர்னரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து, பொறுப்பு துணைவேந்தராக சங்கர் நியமிக்கப்பட்டார். அதேபோல, 2022ம் ஆண்டு முதல் பொறுப்பு பதிவாளராக தியாகராஜன் இருந்து வருகிறார். தற்போது, இவர்களுக்கு இடையே அதிகார மோதல் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிச., 24ம் தேதி நியமன முறைகேட்டின் மூலம் பொறுப்பு பதிவாளராக இருக்கும் தியாகராஜன் நியமிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை சஸ்பெண்ட் செய்வதாக பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டார். மேலும், புதிய பதிவாளராக வெற்றிச்செல்வனை நியமனம் செய்தும் ஆணையிட்டார்.
ஆனால், கூட்டு குழுவிற்கு தான் அனைத்து அதிகாரமும் இருப்பதாகவும், பொறுப்பு துணைவேந்தராக இருக்கும் சங்கரை தாங்கள் பார்த்து நியமித்ததாக கூறி, தியாகராஜன் அந்த உத்தரவை ஏற்க மறுத்துள்ளார். மேலும், பொறுப்பு துணைவேந்தரை நீக்குவதாகவும் ஆணை பிறப்பித்தார். துணைவேந்தரும், பதிவாளரும் ஒருவரையொருவர் நீக்கி விட்டதாக அறிக்கை விட்டது தஞ்சை தமிழ் பல்கலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.