ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனையை உறுதி செய்த ஜனாதிபதி
1 min read
President confirms death sentence of Kerala nurse in Yemen
31/12/2024
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா (வயது36). இவர் தெற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு அந்த நாட்டை சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரை மயக்க மருந்து செலுத்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்த வழக்கில் 2018-ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டார். நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார்.
இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
இந்நிலையில் நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் ஜனாதிபதி ரஷாத் அல்-அலிமி ஒப்புதல் அளித்துள்ளார். தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமதி நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் மரண தண்டனை விதிக்கப்பட்டதை நாங்கள் அறிவோம். பிரியாவின் குடும்பத்தினர் நிலைமையை புரிந்துகொள்கிறோம். இந்த விஷயத்தில் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர், குறிப்பாக அவரது தாயார் பிரேமா குமாரி, அவரது உயிரைக் காப்பாற்ற இடைவிடாமல் போராடினார்.
கடந்த ஆண்டு குமாரி ஏமன் சென்று, தலைநகர் சனாவில் தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும்.
இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் இழப்பீட்டு தொகை பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது நிமிஷா குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.