காற்றில் பறந்த கண்ணாயிரம் வேட்டி/ நகைச்சுவை கதை / தபசுகுமார்
1 min read
Kannayairam dhoti flying in the wind/comedy story/Tapasukumar
1.1.2025
கண்ணாயிரம் சென்னை செல்வதற்காக புதுவை ரெயில் நிலையத்துக்குச் சென்றார். அந்த நேரத்தில் அவர் செல்லவேண்டிய பாபஞ்சர் ரெயில் சென்றுவிட்டது. அதை அறியாமல் அவர் ஒரு கையில் ஒரு பை, மறு கையில் தாமிரபரணி தண்ணீர் உள்ள பக்கெட் இருந்தது.
ரெயில் வருமா வராதா என்று அங்கும் இங்கும் பார்த்தபடி நின்றார். அந்த நேரத்தில் சென்னை வழியாக வடமாநிலத்துக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்து நின்றது. இதில் ஏறலாமா வேண்டாமா என்று யோசித்த வேளையில், ரெயிலுக்கு கண்டக்டர் கிடையாதா.. தாம்பரம் போகணுமா ஏறுங்கன்னு சொல்ல ஆளே இல்லையே.. நமக்கு இதுதான் முதல் ரெயில் பயணம்.. என்ன நிர்வாகம்.. என்ன நிர்வாகம் என்று புலம்பினார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் கண்ணாயிரத்தைப் பார்த்து, என்ன எங்கே போகணும்.. அப்போதிருந்து காத்து நிற்கிறீய என்று கேட்க, கண்ணாயிரம்.. அதுவா.. தாம்பரம் என்க, அப்படின்னா.. ரெயிலில் ஏறுங்க என்று சொல்ல, கண்ணாயிரம் ரெயிலில் ஏற ஓடினார்.
என்ன படிக்கட்டு இவ்வளவு உயரமா இருக்கு.. தொங்கிதான் ஏறணும் போல என்றபடி பையை மேல தூக்கிவைத்தார். தண்ணீர் உள்ள பக்கெட்டைதூக்கி தனியாக வைத்தார்.
அடுத்து அவர் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டது. அடே..ஆள் எல்லாம் ஏறிட்டாங்கன்னு பாக்கமாட்டாங்களா.. என்றவாறு பாய்ந்து ஏறினார்.
அந்த வேகத்தில் வேட்டி கழன்று ஓட , ஓல்டன்.. ஓல்டன் என்று கத்தினார். கால்சட்டையுடன் நின்ற அவரைப்பார்த்த பயணி ஒருவர்.. யோவ்.. மேல ஏறுய்யா.. இது என்ன பஸ்சுன்னு நினைச்சியா.. இது ரெயிலு.. சும்மா..வோல்டன் வோல்டன் என்று சொன்னா நிக்காது.. வேட்டி போனா போகுது.. வேற வேட்டி இருந்தா எடுத்து உடுங்க என்க.. கண்ணாயிரம்.. அட இது என்னய்யா அநியாயம்.. ஆள் ஏறுமுன்னால ரெயிலை எடுத்துடுறாங்க.. வேட்டி காற்றில் பறந்தா போய் எடுக்க முடியல.. அது பறந்துவந்து கொண்டிருக்கிறது.. இன்னும் ஒரு வேட்டிதான் இருக்கு.. என்றவாறு சட்டைப் பையிலிருந்து ஒரு வேட்டியை உருவினார்.. ரெயில் வேகமாக செல்லத் தொடங்கியது.
கண்ணாயிரம் வேட்டியை உதறிவிட்டபடி உடுக்க முயல ரெயில் வேகமாக சென்றதால் அவரால் வேட்டியை உடுக்கமுடியாமல் தடுமாறினார். என்னய்யா குடிச்சிருக்கியா.. தள்ளாடுற என்று ஒருவர் கேட்க, கண்ணாயிரம்.. ஆமாய்யா.. குடிச்சிருக்கேன். தாகமா இருந்தா குடிக்காம என்ன செய்வாங்க.. குடிச்சேன் தண்ணி குடிச்சேன் என்று சொல்ல, அந்த பதிலை கேட்டவர், கண்ணாயிரத்தை முறைத்துப் பார்த்தார்.
கண்ணாயிரம்..என்னடா தண்ணி குடிக்கிறதும் தப்பா.. என்றபடி வேட்டியை மடக்கிப் பிடித்து ஒருவழியாக கட்டினார். அரை ஞாண் கயிறை எடுத்து வேட்டி மேல் மாட்டி..ம். இறுக்கமாக இருக்கு.. கழறாது என்றவர் எந்த சீட்டில் உட்காருவது என்று பார்த்தார்.
எல்லா சீட்டிலும் ஆட்கள் இருந்தார்கள். ஒருவரைப் பார்த்து.. சார் ரொம்ப தூரம் நின்று கொண்டுவரமுடியாது.. கொஞ்சம் இடம் கொடுங்க.. உட்கார்ந்து கொள்கிறேன் என்றார்.
அதற்கு அவர்.. யோவ் .. எல்லோரும் ரிசர்வேஷன் பண்ணி உட்கார்ந்திருக்காங்க.. இடம் கிடையாது.. என்றார்.
கண்ணாயிரம் கோபமானார். என்னங்க.. சீட்டு இல்லன்னா எனக்கு எதுக்கு டிக்கெட் கொடுத்தாங்க.. எனக்கு எப்படியும் சீட்டு இருக்கும். கண்டக்டரை எங்கே.. அவர் வரட்டும் கேட்போம் என்றார்.
அதற்கு அவர், யோவ் இங்கே கண்டக்டர் எல்லாம் வரமாட்டாரு.. டி.டி. ஆருதான் வருவார்.. இது ரிசர்வேஷன் கோச்.. நீங்க ரிசர்வேஷன் பண்ணினால் நம்பர் இருக்கும். என்ன நம்பர் என்று கேட்டார்.
கண்ணாயிரம் கால்சட்டைபைக்குள் மறைத்து வைத்திருந்த டிக்கெட்டை எடுத்துப் பார்த்தார். ஏங்க.. எவ்வளவு அழகான டிக்கெட் பாருங்க என்று காட்டினார்.
அதைப் பார்த்தவர்.. ஏங்க.. நீங்க எடுத்திருப்பது.. அன் ரிசர்வ் டிக்கெட். இந்த வழியா.. அப்படியே கடைசி பெட்டியில் போயி நில்லுங்க. அடுத்த ஸ்டேஷன்ல இறங்கி அன் ரிசர்வ் பெட்டியில ஏறிக்கிங்க என்றார்.
கண்ணாயிரம்..பாத்தியளா.. நம்ம இடம் அங்கே இருக்கு..ஆமா..இந்த ரெயிலுக்கு ஏன் கண்டக்டர் இல்ல.. அவரசமாக ரெயில் ஏறினால் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிக்கிடலாமல்லா.. என்ன நான் சொல்லுறது.. என்றபடி பையைத் தூக்கியபடி பெட்டி உள்ளே நடந்தார்.
என்னப்பா..சுரங்கத்துக்குள் போகிறமாதிரி இருக்கு.. செருப்பு போடலை..ஏதோ தள்ளாடி போயிடுறேன் என்றபடி நடந்தார்.
அவர் தள்ளாடி செல்வதைப் பார்த்த ஒருவர், ஏங்க காலிலே செருப்பு போடுறதில்லையா என்று கேட்க, கண்ணாயிரம்.. அதுவா நான் செருப்பு போடுறதில்லை என்று சபதம் எடுத்திருக்கேன் என்றார்.
என்ன சபதமா என்று அவர் கேட்க, ஆமா.. இந்த நாட்டில் எப்போது செருப்பு திருட்டு ஒழிகிறதோ அப்போதுதான் நான் செருப்பு போடுவேன் என்க, அப்போ இந்த ஜென்மத்துலே செருப்பு போட முடியாது என்று அவர் சொல்ல, கண்ணாயிரம் சிரித்துக்கொண்டார்.
[தொடரும்]
-வே.தபசுக்குமார்,புதுவை.