ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய கனிமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
1 min read
Central government approves Rs 16,000 crore National Minerals Project
30.1.2025
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. அதில், ரூ.16 ஆயிரத்து 300 கோடி மதிப்புள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கனிமங்கள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், “தேசிய கனிமங்கள் திட்டம் (என்சிஎம்எம்) ரூ.16,300 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் உள்நாட்டிலும், கடற்பகுதியிலும் உள்ள முக்கிய கனிமங்களை கண்டறிவதை ஊக்குவிக்கும். மேலும், முக்கிய கனிமங்களின் தேவைக்காக வெளிநாடுகளின் இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்கவும், சுயசார்பு உற்பத்தியை அதிகரிக்கவும் இந்த திட்டம் பெரிதும் உதவும். கனிம ஆய்வு, சுரங்கம், மூலப்பொருளை மேம்படுத்தும் செயலாக்கம் என மதிப்பு சங்கிலியின் அனைத்து நிலைகளையும் இந்த தேசிய கனிமங்கள் திட்டம் உள்ளடக்கும்.
முக்கிய கனிம சுரங்கத் திட்டங்களுக்கு விரைவான ஒழுங்குமுறை ஒப்புதல் செயல்முறையை உருவாக்குவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, கனிம ஆய்வுகளுக்கான நிதி ஊக்குவிப்பை வழங்குவதுடன், கடினமான பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனிம வளங்களை மீட்டெடுப்பதை இந்த திட்டம் உறுதிசெய்யும்” என்று அவர் கூறினார்.