June 14, 2026

Seithi Saral

Tamil News Channel

விடுதலையான இலங்கை தமிழர் இந்தியாவில் தங்க அனுமதி இல்லை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

1 min read

Freed Sri Lankan Tamils ​​not allowed to stay in India: Supreme Court order

19.5.2025
நாடு கடத்தப்படுவதை எதிர்த்தும், இந்தியாவில் வசிக்க அனுமதி கோரியும் இலங்கை நாட்டவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி தீபங்கர் தத்தா, ‘இந்தியா என்ன தர்ம சத்திரமா’ என்று கேள்வி எழுப்பினார்.
விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்காக

இலங்கையை சேர்ந்த ஒருவர், 2015ல் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

‘உபா’ சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரை, தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
‘தண்டனை காலம் முடிந்ததும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்; அப்படி வெளியேற்றப்படும் வரை, அகதி முகாமில் தடுப்புக்காவலில் இருக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது. அதன்படி தான், மூன்றாண்டுகளாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை இந்தியாவில் வசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இலங்கை நாட்டவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

‘விடுதலை புலிகளின் சார்பில் போரில் பங்கேற்றுள்ளேன். அந்த நாட்டுக்கு சென்றால் கைது, சித்ரவதையை எதிர்கொள்ள நேரிடும்’ என்றும் அவர் மனுவில் கூறி இருந்தார்.இந்த மனு நீதிபதிகள் தீபங்கர் தத்தா, வினோத் சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தத்தா, இங்கேயே தங்கிக்கொள்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பினார்.

‘இந்தியாவில் வசிப்பதற்கான அடிப்படை உரிமை இந்திய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும்’ என்றும் நீதிபதி கூறினார்.”உலகம் முழுவதும் இருந்து அகதிகளை ஏற்றுக்கொள்வதற்கு இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் கிடையாது. நாங்கள் இங்கு 140 கோடி மக்கள் தொகையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம்,” என்றும் நீதிபதி கருத்து தெரிவித்தார்.

‘அவரது நாட்டில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது,’ என்று இலங்கை நாட்டவரின் வக்கீல் குறிப்பிட்டபோது, ‘அப்படியெனில் வேறு நாட்டுக்கு போக வேண்டியது தானே’ என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

சமீபத்தில், இதேபோன்ற கோரிக்கையுடன் வந்த ரோஹின்கியா அகதிகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து, நாடு கடத்த உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *