காஷ்மீர் செனாப் பாலம், ஈபிள் டவரை விட உயரம்: எதையும் தாங்கும் திறன்
1 min read
Chenab Bridge in Kashmir, taller than the Eiffel Tower: Capable of withstanding anything
6.6.2025
பிரதமர் மோடி இன்று திறந்து வைத்த உலகின் உயரமான ரெயில் பாலமான செனாப் பாலம், சிவில் இன்ஜினியரிங் துறையில் ஒரு வியத்தகு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த பாலத்தின் சிறப்புகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
ஜம்மு காஷ்மீரில் ரியாசி மாவட்டத்தில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் ரெயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இரும்பால் கட்டப்பட்ட இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரெயில்வே பாலம். நில அதிர்வு மற்றும் பலத்த சூறாவளிக் காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுமார் ரூ.1,400 கோடி செலவில் கட்டப்பட்ட செனாப் பாலம், உலகின் மிக உயரமான ரெயில் மற்றும் வளைவு பாலமாகும். இது ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரமும், பாரிஸின் சின்னமான ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் அதிக உயரமும் கொண்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நிலநடுக்கங்களைத் தாங்கும் திறன் கொண்டது.
செனாப் நதியின் ஓட்டத்திற்கு இடையூறு ஏற்படாமலும் கட்டுமானம் முடிக்கப்பட்டிருக்கிறது. சாலை இணைப்பு எதுவும் இல்லாத காரணத்தால், மிகப்பெரிய இயந்திரங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அந்த இடத்திற்கு கொண்டு செல்வதில் மற்றொரு முக்கிய சவாலாக இருந்தது. பாலத்திற்காக 28,660 மெட்ரிக் டன் எக்கு பயன்படுத்தப்பட்டு, 26 கிலோ மீட்டர் நீளமுள்ள போக்குவரத்துக்கான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிக்கலான கட்டடங்களையோ அல்லது உள்கட்டமைப்பு திட்டங்களையோ 3டி வடிவத்தில் வடிவமைக்கும் டெக்லா எனும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.
120 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடியதாக செனாப் ரயில் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில்கள் பயணிக்க முடியும் திறனுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 8 ரிக்டர் அளவுகோல் வரையிலான பூகம்பங்களை தாங்கும்.பாலத்திற்கு எந்த சேதமும் ஆகாது. 40 டன் டிஎன்டி வெடிப்புகளை தாங்கும் சக்தியும் கொண்டது. இந்தியாவின் மிகவும் சிக்கலான மற்றும் தனிமையான புவியியில் பகுதியில் கட்டப்பட்டுள்ள செனாப் ரயில் பாலம் பொறியியல் துறையில் ஓர் அற்புதமாக பார்க்கப்படுகிறது.
இந்த பாலத்தின் மீது ரெயில்கள் செல்லும் போது சாகச பயணம் போல இருக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த பாலம் பயன்பாட்டுக்கு வருவதால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மேம்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.