China begins construction of largest dam on Brahmaputra river 20.7.2025 இந்தியாவுக்கு மற்றொரு பின்னடைவாக சீனா, திபெத்தில் உள்ள பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே ஒரு பெரிய அணையைக் கட்டும் பணியைத் தொடங்கியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்துக்கு அருகே அமைந்துள்ள இந்த நதி திபெத்தில் யார்லுங் சாங்போ என்றும் இந்தியாவில் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.
நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டார்.
பொருளாதார ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் திபெத்தை இணைக்கும் இந்த திட்டத்திற்கு சீன அரசு கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
இந்த அணை கட்டி முடிக்கப்பட்டால், சீனாவின் யாங்சே ஆற்றில் உள்ள உலகின் மிகப்பெரிய 'த்ரீ கோர்ஜஸ் அணை'யை விட பெரியதாக இருக்கும். இது இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஐந்து நீர்மின் நிலையங்கள் கட்டப்படும் என்றும், மொத்த முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் யுவான் (167.1 பில்லியன் டாலர்) எனவும் கூறப்பட்டுள்ளது. இந்தியா இந்த அணைத் திட்டம் குறித்து சீனாவிடம் கடந்த ஜனவரியில் கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.