Student who went to buy books in Pathamadai found dead in a well 21.7.2025 நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகில் உள்ள பத்தமடை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்தாஸ். இவரது மூத்த மகள் இசானி (வயது 15). இவர் அப்பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 19 ஆம் தேதி, தன்னுடன் படிக்கும் மாணவியிடம் இருந்து புத்தகம் வாங்கி வருவதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால், வெகு நேரம் கழிந்தும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது உறவினர்கள் உடனடியாக தேடத் தொடங்கினர்.
இந்நிலையில், இன்று காலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கிணற்றில் பள்ளி சீருடை அணிந்த நிலையில் ஒரு சிறுமியின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பத்தமடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சிறுமியின் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. பின்னர் மீட்கப்பட்ட சடலம் மாணவி இசானி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் மரணம் அப்பகுதியை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.