‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்ற கார் குளத்தில் பாய்ந்தது
1 min read
Couple escapes after car plunges into pond after following route shown by ‘Google Maps’
25.7.2025
கேரள மாநிலம் கோட்டயம் செத்திப்புழையை சேர்ந்தவர் ஜோசி ஜோசப் (வயது62). இவருடைய மனைவி ஷீபா (58). இவர்கள் இருவரும் ஒரு காரில் மான்வெட்டம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். காரை ஜோசி ஜோசப் ஓட்டி சென்றார். அவர் ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் காரை ஓட்டி சென்று கொண்டிருந்தார்.
அந்த கார் கருப்பந்தரை என்ற இடத்தில் சென்ற போது எதிர்பாராமல் அங்குள்ள கடவுகுளத்திற்குள் பாய்ந்தது. அப்போது காரில் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வரமுடியாமல் சிக்கி கொண்டனர். இதை அந்த வழியாக வந்த பொதுமக்கள் பார்த்து விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கயிறு மூலம் காரை கட்டி இழுத்து கரைக்கு கொண்டு வந்தனர். அத்துடன் காரில் இருந்த தம்பதியை பத்திரமாக மீட்டனர்.
இதுகுறித்து ஜோசி ஜோசப் கூறும்போது, ‘சாலையெங்கும் வெள்ளம் தேங்கி கிடந்த நிலையில் ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிர்பாராத விதமாக கார் குளத்திற்குள் பாய்ந்தது’ என்றார். ‘கூகுள் மேப்’ காட்டிய பாதையில் சென்ற கார் குளத்திற்குள் பாய்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.