தேர்தல் வாக்குறுதி படி ஆழ்வார்குறிச்சி மதுக்கடையை மூட அமைச்சரிடம் கோரிக்கை
1 min read
Request made to the Minister to close the Alwarkurichi liquor shop in accordance with the election promise.
9.6.2026
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி ஆழ்வார்குறிச்சி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான டாஸ்மாக் மதுக்கடையை மூட வேண்டுமென தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்ரவர்த்தி அமைச்சர் விக்னேஷிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினார்.
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆழ்வார்குறிச்சி அருகே கல்யாணிபுரத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் சம்பன்குளம் ஆழ்வார்குறிச்சி சாலையில் நீண்டகாலமாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
இந்த சாலை வழியாகத்தான் கருத்தப்பிள்ளையூர், பெத்தான்பிள்ளை குடியிருப்பு, சிவசைலம், அழகப்பபுரம், சம்பன்குளம், கோவிந்தபேரி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லவும் பொதுமக்கள் ஆழ்வார்குறிச்சி அம்பாசமுத்திரம் போன்ற ஊர்களுக்கு செல்லவும் இந்த சாலையே முக்கிய சாலையாகும். மாலை மற்றும் இரவு நேரத்தில் இந்த சாலை குடிமகன்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் இவ்வழியை கடந்து செல்வதென்பது பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் தினந்தோறும் பெரும் போராட்டமாகவே உள்ளது.
மேலும், இந்த டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ள கல்யாணிபுரம் பகுதியை சுற்றி சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் வெளியூர் செல்ல இந்த மதுக் கடையை கடந்துதான் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
எனவே, பொதுமக்களுக்கும் மாணவ மாணவியருக்கும் அனைத்து விதங்களிலும் இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இப்பகுதி மக்களும் சமூகநல ஆர்வலர்களும் கோரிக்கை மனுக்கள் பலமுறை அளித்தும் எதுவும் நடக்காததால் சலிப்படைந்து விட்டனர்.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டி.பி.வி.வி. விபின் சக்ரவர்த்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது இப்பகுதி டாஸ்மாக் மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பேன் என பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி இப்பகுதி டாஸ்மாக் மதுக்கடையை (கடை எண்: 10818) மூட வேண்டுமென்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷிடம் இப்பகுதி மக்களின் நிலையை கோரிக்கை மனுவாக அளித்து ஆழ்வார்குறிச்சி டாஸ்மாக் மதுக்கடையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
One attachment
• Scanned by Gmail