சீனா விவகாரத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்
1 min read
Supreme Court slams Rahul Gandhi for posting China issue on social media
4.8.2025
காங்கிரஸ் மூத்த தலைவர் 2023ம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். இந்த யாத்திரையின்போது இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி என்னிடம் கூறினார் என்று ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும், இந்திய ராணுவம் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்தார்.
இதனிடையே, இந்திய ராணுவம் குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதேவேளை, இந்த வழக்கு அரசியல் ரீதியிலாக தொடரப்பட்டதாகவும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல்காந்தி மனு தாக்கல் செய்தார். ஆனால், ராகுல்காந்தியின் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ராணுவம் குறித்த கருத்து தொடர்பாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், நீங்கள் (ராகுல் காந்தி) எதிர்க்கட்சி தலைவர். ராணுவம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசலாம். சமூகவலைதளத்தில் கருத்துக்களை தெரிவித்தது ஏன்?
இந்தியாவின் 2 ஆயிரம் சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உங்களுக்கு எவ்வாறு தகவல் வந்தது. உண்மையான இந்தியராக இருந்தால் நீங்கள் இவ்வாறு கூறியிருக்கமாட்டீர்கள்’ என்றனர்.
அதேவேளை, ராகுல்காந்திக்கு எதிராக அலகாபாத் ஐகோர்ட்டில் நடைபெற்று வரும் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், வழக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது.