“திமுக அரசின் திட்டங்களே கவர்னர் உரையில் உள்ளது”- உதயநிதி விமர்சனம்
1 min read
“The Governor’s address contains the schemes of the DMK government itself” – Udhayanidhi
18.6.2026
சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
”திமுக ஆட்சியில் அரசின் எந்த உரையையும் கவர்னர் முழுவதுமாக படித்ததே இல்லை. பல திருத்தங்களை செய்வார். இன்று தவெக அரசு தயாரித்த உரையை, ஒரு வரி கூட மாற்றாமல் படித்துள்ளார். இதிலிருந்தே தவெக – பாஜக இடையே இணக்கமான சூழல் உள்ளதோ என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கண்டெண்ட் மெட்டீரியலாக கவர்னர் உரை அமைந்துள்ளது. முரண்பாடுகளின் மொத்த உருவமாக கவர்னர் உரை அமைந்துள்ளது. மிகுந்த காழ்ப்புணர்ச்சியுடன் கவர்னர் உரை உள்ளது.
தேர்தலின் போது அறிவித்த பல அறிவிப்புகளின் ட்ரெய்லராக, ப்ளூ ப்ரிண்ட்டாக இந்த கூட்டம் இருக்கும் என நினைத்தோம். மக்களும் அதைதான் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து எப்படி எஸ்கேப் ஆகலாம் என்பதை காட்டும் முன்னோட்டமாக சமீபத்தில் வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அரசு அமைந்து ஒரு மாதம் ஆகிறது. இவர்களிடம் சொல்ல சாதனைகளே இல்லை. இவர்கள் சொல்வது, அறிவிப்பது எல்லாமே திராவிட மாடல் அரசின் திட்டங்கள். திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள், கோரிக்கைகளே கவர்னர் உரையில் உள்ளது. தவெக அரசு காப்பி பேஸ்ட் அரசாக உள்ளது. திமுக அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு, ஆட்சியின் தோல்விக்கான பழியையும் திமுக அரசின் மீது போட்டுள்ளார்கள்.
தவெக அரசின் திட்டங்கள், முந்தைய அரசின் நீட்சி தான். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவது பற்றி கவர்னர் உரையில் அறிவிப்பு இல்லை. தமிழகத்தின் வளர்ச்சிக்கு எந்தவொரு திட்டங்களும் கவர்னர் உரையில் இல்லை. முந்தைய அரசின் திட்டங்களை முடக்கினால் சும்மா இருக்க மாட்டோம்.”
இவ்வாறு அவர் கூறினார்.