நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம்: விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைப்பு
1 min read
Money stashed in judge’s house: 3-member team formed to investigate
12.8.2025
டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் யஷ்வந்த் வர்மா. இவரது வீட்டில் கடந்த மார்ச் மாதம் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் சென்று தீயை அணைத்தபோது, வீட்டின் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், மூட்டை மூட்டையாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது, நாடு முழுதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் சிக்கிய விவகாரம் குறித்து விசாரிக்க, குழு ஒன்றை, சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் நீதிபதி வீட்டில் பணம் இருந்தது உறுதியானது. இதைதொடர்ந்து நீதிபதி, பணியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி 146 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானம் மக்களவையில் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானம் குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா இன்று விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
“ நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு அமைக்கப்பட்டு உள்ளது. 3 பேர் கொண்ட குழுவில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அரவிந்த் குமார், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் கர்நாடக ஐகோர்ட்டு மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பதவி நீக்க நடவடிக்கை அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். இந்தக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும்வரை இந்த தீர்மான முன்மொழிவு நிறுத்தி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.