மதம் மாற காதலன் கட்டாயப்படுத்தியதால் இளம்பெண் தற்கொலை
1 min read
Young woman commits suicide after boyfriend forces her to convert
12.8.2025
கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் பகுதியை சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர், அங்கமாலி அருகே உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இதற்கிடையே அவருக்கும், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் பரவூர் பகுதியை சேர்ந்த ரமீஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் அவர்கள் நெருங்கி பழகி வந்தனர். சமீபத்தில் இளம்பெண்ணை ரமீஸ் தனது வீட்டுக்கு அழைத்து சென்று பேசியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மனமுடைந்த இளம்பெண் கடந்த 9-ந் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த கோதமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் இளம்பெண்ணின் வீட்டில் இருந்து, அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதை போலீசார் கைப்பற்றினர். அதில், என்னை காதலன் ரமீஸ் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மதம் மாற கட்டாயப்படுத்தியதால், நான் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறப்பட்டு உள்ளது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் தனது மகள் சாவுக்கு ரமீஸ் தான் காரணம் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் தற்கொலைக்கு தூண்டியது, பாலியல் வன்கொடுமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரமீஸை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.