June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

பெண்களின் முன்னேற்றத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது – அரசு பெருமிதம்

1 min read

Tamil Nadu is a pioneer state in the advancement of women – Government is proud

18.8.2025
தமிழ்நாடு, பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் செய்தி, மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

”உலக மனித சமுதாயத்தில் மகளிர் ஏறத்தாழ சரிபாதியாக உள்ளனர், அவர்களின் சிந்தனைகளும் உழைப்பும் உலக முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடியவை ஆனால் மகளிர் சமுதாயம் சுதந்திரமற்ற ஒரு கூட்டுப் பறவை போல் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தது. உலகில் நிலவும் ஆட்சி முறைகளில் முதன்மையானது குடியாட்சி முறை. குடி ஆட்சிமுறையில் ஒவ்வொருவரும் வாக்களித்து தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.

இந்த வாக்களிக்கும் உரிமையைக் கூட மகளிருக்கு வழங்கப்படாத சூழ்நிலையில் 1921 ஆம் ஆண்டில் நீதிக் கட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் தான் முதல்முதலில் மகளிருக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. அதன் பின்னர்தான் மேலை நாடுகளில் எல்லாம் வாக்களிக்கும் உரிமை மகளிருக்கு வழங்கப்பட்டது என்பது வரலாறு. அதேபோல தமிழ்நாட்டில் 1971 இல் அமைந்த நீதிக் கட்சி அரசும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் அமைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்குக் கல்வி உரிமை அரசுப் பணிகளில் 30 சதவீத இட ஒதுக்கீடு உரிமைஇ உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு, பின்னர் அதுவே 50 விழுக்காடாக நடைமுறைபடுத்தப்பட்டமை, முதலிய மகத்தான சாதனைகள் இந்தியாவிலேயே நிகழ்த்தப்பட்டன.

திராவிட மாடல் அரசின் புரட்சிகரமான திட்டங்கள்

2021 திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு மகளிர் சமுதாயம் மேலும் முன்னேற வேண்டும் என்னும் குறிக்கோளுடன் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமை பெண் திட்டம், மகளிரைத் தொழில்முனைவோராக்கும் திட்டம் முதலிய புரட்சிகரமான திட்டங்கள் இந்தியாவிற்கே வழி காட்டும் திட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு மகளிர் சமூக விடுதலை பொருளாதார விடுதலை முதலிய அனைத்து வகையிலும் ஆண்களுக்குச் சமமாக உரிமைகள் பெற்றுப் படிப்படியாக முன்னேறி வருகின்றனர். இவையெல்லாம்இ இந்திய மாநிலங்கள் எதிலும் நடைமுறைப்படுத்தப்படாத புதிய திட்டங்கள். இத்திட்டங்களைப் பிற மாநிலங்கள் தற்போது தான் பின்பற்றத் தொடங்குகின்றன.

நிர்வாகத் துறையில் மட்டும் அல்ல தொழில்துறையிலும் தமிழ்நாட்டுப் பெண்கள்

தமிழ்நாட்டுப் பெண்கள் நிர்வாகத் துறையில் மட்டும் அல்லாமல் தொழில்துறையிலும் மகத்தான சாதனைகள் புரிந்து வருகின்றனர். தொழில்துறையில் மகளிர் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அனைத்துத் தரப்பினரும்பாராட்டுகின்றனர்.

தமிழ்நாடு பெண்கள் முன்னேற்றத்திலும், பாதுகாப்பிலும், அவர்களுக்கான வேலைவாய்ப்பிலும் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரி மாநிலமாக விளங்குகிறது. ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சி என்பது அங்கிருக்கும் பெண்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணர்கிறார்கள், வாழ்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. இந்த வகையில், தமிழ்நாடு பெண்களின் முன்னேற்றத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் அரசின் கொள்கைகளும் திட்டங்களும்

அரசின் கொள்கைகளும் திட்டங்களும் சமூக ஆதரவும் இணைந்து, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதி செய்கின்றன. முறைப்படுத்தப்பட்ட உற்பத்தித் துறையில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்கும் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு உள்ளது. இந்தத் துறை, பெண்களுக்கு நிலையான வருமானத்தையும், வேலை பாதுகாப்பையும் வழங்குகிறது. மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேசத்திற்கு அடுத்ததாக, முறைசாராத துறைகளில் பெண்கள் பணியாற்றுவதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது. இது மொத்தத்தில் இந்தியாவின் 9.3% பங்களிப்பை வழங்குகிறது என்று சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் (CRIER) அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களில் 41.4% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது, பெண்கள் தொழில்வாய்ப்புகளைப் பெறுவதிலும், பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக முன்னேற்றம் காண்பதிலும் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை வெளிப்படுத்துகிறது, இது, பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளார்கள் என்பதற்கான முக்கிய ஆதாரம்.

தொழில்துறையில் பெண்களின் இந்த அதிகப்படியான பங்கேற்பு, வேலைவாய்ப்பில் பெண்களுக்குப் பாரபட்சம் இல்லை என்பதையும், அவர்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகிறது, இது ஒரு பாதுகாப்பான, பாலின சமத்துவம் நிறைந்த சூழலை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம், அவர்களின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பிற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு பெண் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக இருக்கும்போது, அவர் குடும்பம் மற்றும் சமூகத்தில் அதிக மரியாதையைப் பெறுகிறார். மேலும்; எந்தவொரு அச்சுறுத்தலிலிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஆற்றலையும் பெறுகிறார்.

தமிழ்நாட்டில், அரசுப் பணியிடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பெண்களுக்குக் கணிசமான இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. இது, அவர்கள் பணியிடங்களில் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்கிறது. அதேபோல், பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பிற்காகப் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் போக்சோ சட்டம் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தச் சட்டம், பெண்களுக்குப் பாதுகாப்பான பணியிடச் சூழலை உறுதி செய்வதோடு, புகார் அளிப்பதற்கான வழிமுறைகளையும் எளிதாக்குகிறது.

தமிழ்நாட்டில் கல்வியறிவு விகிதம் அதிகமாக இருப்பதால், சமூகத்தில் பெண்கள் குறித்த விழிப்புணர்வும் உயர்ந்துள்ளது. திராவிட மாடல் அரசு வழங்கும் விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை போன்ற பல்வேறு திட்டங்கள், பெண்களின் கல்வி மற்றும் தொழில் முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கின்றன.

பெண்களின் பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான – வேலைவாய்ப்புக்கான – முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கிய ஒரு திட்டம் விடியல் பயணம். விடியல் பயணத்திட்டத்திற்கு அரசு செய்யும் செலவு மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடாக மட்டுமே பார்க்கப்படுகிறது. புதுமைப்பெண் திட்டம் பல்லாயிரக்கணக்கான கல்லூரி மாணவிகளின் இடை நிற்றலைக் குறைத்து, அவர்களின் உயர்க்கல்விக் கனவைச் சாத்தியாக்கியிருக்கிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல இலட்சக்கணக்கான மாணவிகள் தங்களது திறனை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் பெற்றுள்ளனர். நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் காவல்துறையில் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களான காவலன் செயலி, இரவு நேரக் கண்காணிப்புப் பேட்ரோல் போன்ற திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேற

எதிர்காலத்தில், பெண்கள் சமுதாயம் மேலும் முன்னேற, சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்த இந்திய ஆராய்ச்சி போன்ற ஆய்வு நிறுவனங்களின் பரிந்துரைகள் மிகவும் அவசியமானவை. குறிப்பாக, பெண்களுக்குத் தனி கழிப்பறை வசதிகள், எளிதாக அதிக எடையைத் தூக்க உதவும் உபகரணங்கள், பயண சிரமங்களைச் சரிசெய்தல் போன்றவை, மேலும் அதிக அளவில் பெண்களை முறைசார்ந்த துறைகளுக்குக் கொண்டு வர உதவும்.

தமிழ்நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் உள்ளனர் என்பது வெறும் ஒரு கருத்து அல்ல. இது, தரவுகளாலும், நடைமுறை முன்னேற்றங்களாலும் நிரூபிக்கப்பட்ட உண்மை. உற்பத்தித் துறையில் பெண்களின் பங்களிப்பு, பொருளாதாரச் சுதந்திரம், மற்றும் அரசு வழங்கும் பாதுகாப்பு அம்சங்கள், முதலியவை தமிழ்நாடு பெண்களுக்கான சிறந்த இடமாக இருப்பதைத் தெளிவுபடுத்துகின்றன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *