அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ள நடவடிக்கை – ரிசர்வ் வங்கி ஆளுநர் தகவல்
1 min read
Reserve Bank Governor announces necessary steps to counter US taxation
26.8.2025
ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக இந்தியா மீது அமெரிக்கா 25 சதவீதம் வரி விதித்தது. ஏற்கனவே விதித்த 25 வரியுடன் சேர்ந்து தற்போது வரிச்சுமை 50 சதவீதம் ஆகி உள்ளது. இந்த கூடுதல் வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது.
இந்நிலையில் இதன் விளைவுகள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று, மும்பையில் நடைபெற்ற வங்கிகள் மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது:-
“இந்த வரிவிதிப்பால், ரத்தினக் கற்கள், நகைகள், ஜவுளி, ஆடைகள் மற்றும் இறால் ஏற்றுமதி போன்ற துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
இந்த பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரிசர்வ் வங்கியும் பொருளாதாரத்திற்குத் தேவையான ஆதரவை அளிக்கும்.
ஏற்கெனவே, பொருளாதாரம் புழங்குவதற்கு வசதியாக ரெப்போ வட்டி விகிதத்தை 100 புள்ளிகள் குறைத்துள்ளோம்.
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுகளைத் தரும் என்றும் இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் வர்த்தக உறவுகள் பாதிக்கப்படாது நாங்கள் நம்புகிறோம்.
ஆகஸ்ட் 15, 2025 நிலவரப்படி இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 695 பில்லியன் டாலர் ஆக உள்ளது. இது சுமார் 11 மாத இறக்குமதிக்கு போதுமானது.
இந்தியப் பொருளாதாரம் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.