கணவருடன் 15 நாள், காதலனுடன் 15 நாள் வாழ விரும்பிய பெண்
1 min read
A woman who is determined to live with her husband for 15 days and then with her boyfriend for 15 days
29.8.2025
உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் அதே பகுதியை சேர்ந்த வாலிபரை 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு, அவருக்கு வேறொரு வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. அடிக்கடி அவருடன் செல்போனில் பேசினார்.
கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்து தனிமையில் இருந்தார். அவருடைய கணவர் கண்டித்தும் கேட்கவில்லை, அவ்வப்போது கணவனை விட்டுவிட்டு கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்தார். ஒரு வருடத்திற்குள், அவர் 10 முறை கள்ளக்காதலுடன் தலைமறைவானார். ஒவ்வொரு முறையும், அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர். ஆனாலும் திரும்ப, திரும்ப கள்ளக்காதலனை சந்தித்தார். இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த பிரச்சனையை தீர்க்க குடும்ப உறுப்பினர்கள் கிராம பஞ்சாயத்தை கூட்டினர். அங்கு, அந்த இளம்பெண் துணிச்சலுடன் தனது அதிர்ச்சியூட்டும் முடிவை வெளிப்படுத்தினார். தனது காதலனுடன் ஒரு மாதத்தில் 15 நாட்கள் தங்க அனுமதித்தால் மட்டுமே மீதமுள்ள 15 நாட்களுக்கு தனது கணவருடன் வாழ்வேன் என்று தெரிவித்தார்.
அந்தப் பெண்ணின் முடிவைக் கேட்டு, அவரது கணவர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கிராமப் பெரியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கிராமப் பெரியவர்கள் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கள்ளக்காதலை கைவிடுமாறு அறிவுரை வழங்கினர். ஆனால் மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் இருக்க அனுமதித்தால் மட்டுமே கணவருடன் வாழ்க்கை நடத்துவேன் என இளம்பெண் தொடர்ந்து அடம்பிடித்தார்.
மணிக்கணக்கில் அவருக்கு அறிவுரை வழங்கியும் தன் காதலனை முற்றிலுமாக விட்டுவிட மறுத்துவிட்டாள். இதனை கேட்டதும் அவருடைய கணவர் கதறி அழுதார். மனைவியிடம் கெஞ்சி பார்த்தார்.
ஆனால் இளம்பெண் தான் எடுத்த முடிவை மாற்றவே முடியாது என உறுதியாக கூறிவிட்டார். இதனால் மனமடைந்து போன கணவர் இளம்பெண்ணை அவருடைய கள்ளக்காதலனுக்கு தாரை வார்த்து விட்டு சோகத்துடன் திரும்பி சென்றார்.
உத்தரபிரதேசத்தில் நடந்த இந்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.