நேபாளம் வழியாக பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவல்
1 min read
3 terrorists infiltrate into Bihar via Nepal
28.8.2025
பீகாரில் 3 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். இவர்கள் பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆவர். அவர்கள் ராவல்பிண்டியை சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டை சேர்ந்த அடில் உசேன் மற்றும் பஹவல்பூரை சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த பயங்கரவாதிகள் 3 பேரும் ஆகஸ்டு 2-வது வாரத்தில் நேபாள தலைநகர் காட்மாண்டுவை அடைந்துள்ளனர். அதன்பிறகு கடந்த வாரம் நேபாள எல்லை வழியாக பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பீகார் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு பயங்ரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினரும், மாநில போலீசாரும் ஈடுபட்டு உள்ளனர்.
பீகாரில் உள்ள சோதனை சாவடிகள் அனைத்திலும் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர்.
இந்திய – நேபாள எல்லைப்பகுதியிலும், கீமாஞ்சல் மாவட்டத்திலும் பாதுகாப்பு படையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டு உள்ளனர். மதுபானி, சீதாமர்கி, சுபால், அராரியா, கிழக்கு சம்பாரன் மற்றும் மேற்கு சம்பாரன் ஆகிய மாவட்டங்கள் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் ரோந்து பணிகள் நடந்து வருகிறது.
பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களை பிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.