பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
1 min read
Duty exemption on cotton imports extended for another 3 months
28.8.2025
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததால் ஜவுளி ஏற்றுமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஜவுளித்துறை பாதிக்கப்படாமல் இருக்க மத்திய அரசு மாற்று வழிகளை தேடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பருத்தி இறக்குமதிக்கு அடுத்த மாதம் 30ம் தேதி வரை தற்காலிக வரி விலக்கு அளிக்கப்படுவதாக, மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், தற்காலிகமாக அமல்படுத்தப்பட்டு இருந்த வரிவிலக்கு மேலும் 3 மாதங்களுக்கு, அதாவது டிசம்பர் 31-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை நூல், துணி, ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் உள்ளீட்டுச் செலவுகளைக் குறைக்கும் என்றும், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்திச் செலவுகளைக் குறைப்பதன் மூலமும், ஜவுளித் துறையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) பாதுகாப்பதன் மூலமும் இந்திய ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதியில் போட்டித் தன்மையுடன் செயல்பட இந்த அறிவிப்பு உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதால், தொழில்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.