அஜித்குமார் மரண வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகையை திருப்பி அனுப்பியது கோர்ட்டு
1 min read
Ajith Kumar death case: Court returns CBI chargesheet
1.9.2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்ட் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த கொலை வழக்கை முறையாக விசாரணை நடத்தி, ஆகஸ்ட் 20-ந்தேதிக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு மதுரை ஐகோர்ட்டு ஏற்கனவே கெடு விதித்திருந்தது. அதன்படி, குறிப்பிட்ட தேதியில் சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தது.
இந்த நிலையில், சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கோர்ட்டு திருப்பி அனுப்பியது. மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறைகள் உள்ளதாகக் கூறி, அதை திருப்பி அனுப்பியது. குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் தாக்கல் செய்ய சிபிஐக்கு மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.