பெண் தற்கொலைக்கு காரணமான கந்துவட்டிக்காரர் கைது
1 min read
Loan shark arrested for causing woman’s suicide
6.9.2025
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியில் கந்து வட்டி கொடுமையால் மலையில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கந்துவட்டி காரரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி வளையர் குடியிருப்பு முருகன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லெட்சுமி (வயது 50). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி லெட்சுமி ஆகியோர் கேரளாவில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தனர். இதனிடையே கடந்த 1-ந் தேதி மாலை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குதித்து லெட்சுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இதில் தென்காசி அருகே பாட்டாக்குறிச்சி பகுதியை சேர்ந்த சுடலை என்பவரது மகன் மாணிக்கராஜ் என்பவரிடம் வட்டிக்கு ரூ.7 லட்சம் கடன் வாங்கி லெட்சுமி வீடு கட்டி உள்ளார். இதையடுத்து அசலையும் வட்டியையும் கேட்டு 7லட்சம் ரூபாய் கடனுக்கு 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை மாணிக்கராஜ் அடமானமாக எழுதி வாங்கியுள்ளார். மேலும் பணம் கேட்டு கேரளாவுக்கு சென்று கணவன், மனைவி இருவரையும் அழைத்து வந்து வீட்டைக் கிரையம் எழுதி கேட்டு மிரட்டியதால் மனம் உடைந்த லட்சுமி ஊருக்கு வந்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டை கிரயம் எழுதி கேட்டு மிரட்டிய கந்து வட்டிக்காரர் மாணிக்கராஜை போலீசார் கைது செய்தனர்.