தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம்- எடப்பாடி பழனிசாமி உறுதி
1 min read
We will bring back the projects that were stopped during the DMK rule – Edappadi Palaniswami
10.9.2025
பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கைத்தறி நெசவாளர்கள், தென்னை விவசாயிகள், கல்குவாரி, கிரஷ் உரிமையாளர்கள் சங்கத்தினர், டிப்பர் லாரி டிரைவர்கள் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. அவர்களுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். பின்னர் அவர் பேசியதாவது:-
மாவட்டத்திற்கு ஒரு இடத்தில் தான் ஆலோசனை கூட்டம் நடத்துகிறேன். ஆனால் கோவை மாவட்டத்தில் மட்டும் தான் தொகுதிக்கு ஒரு கூட்டம் நடத்தி வருகிறோம்.
அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டதாக கைத்தறி நெசவாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் பசுமை வீடுகள் கட்டி தரப்படும். இதற்கு என்று கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து நல்ல தரமான முறையில் கான்கிரீட் முறையில் பசுமை வீடுகள் கட்டி கொடுக்கப்படும். அத்துடன் திருமண உதவி திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களுக்கு பட்டு சேலை, பட்டு வேட்டி வழங்கப்படும்.
அ.தி.மு.க ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு என எண்ணற்ற திட்டங்களை செய்துள்ளோம். குறிப்பாக துணி நெய்யப்பட்டு, அதிகளவில் தேக்கம் அடைந்த போது, கைத்தறி நெசவாளர்கள் என்னை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சுமார் 350 கோடி ரூபாய் மானியம் கொடுக்கப்பட்டது. இதுதவிர ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கையும் கொண்டு வந்தோம். கொரோனா காலத்தில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 930 கைத்தறி நெசவாளர்களுக்கு பேருக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை கொடுத்துள்ளோம். இதற்காக ரூ.32 கோடி ஒதுக்கீடு செய்தோம்.
அ.தி.மு.க ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்கள் தற்போது தி.மு.க. ஆட்சியில், அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்றால் ரூ.500 கோடி வேண்டும். இந்த ஆட்சியில் பணம் இல்லை. அதனால் தான் இதுவரை எந்த மாவட்டத்தையும் அவர்களால் அறிவிக்க முடியவில்லை. நான் முதலமைச்சராக இருக்கும் போது 6 மாவட்டங்களை அறிவித்தேன். இப்போது ஆட்சியில் உள்ளவர்களால் நிதி ஆதாரத்தை உருவாக்க முடியவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளுக்கும் சரிசமமாக நிதி பகிர்ந்து கொடுக்கப்பட்டது. இதனால் எல்லா துறைகளும் வளர்ச்சியடைந்தது. இந்த ஆட்சியில் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. இவ்வளவு கடன் வாங்கியுள்ளனர். இதனை எப்படி திருப்பி கட்டுவது. பெரிய ஒரு போராட்டமாக தான் இருக்கிறது.
குறிப்பிட்ட அளவுக்கு கடன் வாங்கினால் தான் ஒரு அரசால் திருப்பி செலுத்த முடியும். அளவுக்கு மீறி கடன் வாங்கினால் அதனை திருப்பி செலுத்துதவற்கே புதிய வரிகள் போட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனை தான் இந்த தி.மு.க அரசு புதிது புதிதாக வரி போட்டு வைத்துள்ளது. இவ்வளவு வரி போட்டும், இந்த ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை.
அ.தி.மு.க ஆட்சியில் சாலை வசதிகள், மேம்பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கால்வாய்களை கூட கான்கிரீட் கால்வாய்களாக மாற்றியுள்ளோம்.
அ.தி.மு.க. ஆட்சியில் ஆனைமலையாறு-நல்லாறு திட்டத்திற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கேரள முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். 2, 3 தடவை இந்த பேச்சுவார்த்தை நடந்தது. எல்லாம் கூடி வந்த வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தி.மு.க ஆட்சியில் இதற்கான நடவடிக்கைகள் அப்படியே நின்று போய்விட்டது.
அ.தி.மு.க ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடன் 2 முறை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று விவசாயிகளுக்கு அ.தி.மு.க ஆட்சியில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். அ.தி.மு.க ஆட்சி அமைந்ததும் விவசாயிகளுக்கு என்னென்ன பிரச்சனை என்பதை முழுமையாக ஆய்வு செய்து, அவர்களை அந்த பிரச்சனையில் இருந்து விடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.