ஆயுர்வேத சிகிச்சைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் கேரளா வந்தார்
1 min read
Arvind Kejriwal arrives in Kerala for Ayurvedic treatment
11.9.2025
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா வந்துள்ளார்.
அவர் கோட்டயம் மாவட்டம் காஞ்சிரப்பள்ளி அருகே பரத்தோடு பகுதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற உள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு கேரளா வந்தார். பின்பு அவர் ஆயுர்வேத சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அரவிந்த் கெஜ்ரிவாலுடன் அவரது குழுவை சேர்ந்தவர்கள் மற்றும் கேரள போலீசார் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சென்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அந்த மருத்துவமனையில் இன்று முதல் ஆயுர்வேத சிகிச்கையை தொடங்கினார்கள். மொத்தம் 7 நாட்கள் ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பின்பு ஒரு வாரத்திற்கு பிறகு சிகிச்சை முடிந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார். ஆயுர்வேத சிகிச்சைக்காக பல அரசியல் பிரபலங்கள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இந்தநிலையில் தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் வந்திருக்கிறார்.
மூன்று முறை டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 2024 மக்களவை தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு மார்ச் மாதம் டெல்லி மதுபான கொள்கை வழக்கில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு ஜாமின் வழங்கியதை தொடர்ந்து சிறையில் இருந்து வெளியே வந்தார். அதன்பிறகு தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால், 2025 சட்டமன்ற தேர்தலில் டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.