பாவூர்சத்திரம் அருகே சிகிச்சை பெற்ற பெண் மரணம்- தனியார் கிளினிக் சீல் வைப்பு
1 min read
Woman treated near Pavurchatram dies – private clinic sealed
14.9.2025
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணம் பகுதியில் முத்துக்கிருஷ்ணப்பேரி மெயின் ரோடு பகுதியில் வசித்து வரும் கணபதி என்பவரின் மகன் ஜி.பி.சரவணக்குமார் (வயது 27) என்பவர் ஜிபி எஸ் கிளினிக் என்ற பெயரில் கடந்த மூன்று மாதங்களாக கிளீனிக் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அடைக்கலப்பட்டணம் அருகே உள்ள வேதம்புதூர் கீழத் தெருவை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மனைவி சுப்பம்மாள் (வயது 62) இவர் நீரழிவு நோய்க்காக சிகிச்சை பெற வந்துள்ளார்.
இந்நிலையில் சுப்பும்மாளுக்கு டாக்டர்சரவணக்குமார் அவரை உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலையில் சுப்பம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த சுப்பம்மாளின் கணவர் மாரிமுத்து மற்றும் அவரது உறவினர்கள் டாக்டர் சரவணக்குமாரின் தவறான சிகிச்சையினால் தான் சுப்பம்மாள் இறந்துவிட்டதாக கூறியதோடு இதுபற்றி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து பாவூர்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகரன், உதவி ஆய்வாளர் பட்டுராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சுப்பம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இது பற்றி தகவலறிந்த தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அனுமதி இன்றி செயல்பட்டு வந்ததாக கூறி ஜிபிஎஸ் கிளினிக்கை பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் விசாரணையில் சரவணக்குமார் எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பை படித்துள்ளாரா? கிளினிக் நடத்த உரிய அனுமதி பெற்றுள்ளாரா? சுப்பம்மாளுக்கு எந்த வகையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.