பெரியார் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
1 min read
Chief Minister M.K. Stalin pays homage to Periyar statue
17.9.2025
தந்தை பெரியாரின் 147-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை ‘சமூக நீதி நாள்’ ஆக தமிழ்நாடு அரசு 2021-ல் அறிவித்திருந்தது. இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை மு.க.ஸ்டாலின் ஏற்றார்.
திமுக சார்பில் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15-ந் தேதி, பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 17-ந் தேதி மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 17-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்தாண்டு முப்பெரும் விழா கரூர் கோடங்கிபட்டியில் இன்று மாலை தொடங்கியது. இவ்விழாவில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.
இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், “என்னை வகுத்தால் என் தம்பிகள்! என் தம்பிகளைக் கூட்டினால் நான்!” என்றார் பேரறிஞர் அண்ணா! புரட்சியாகத் தமிழ் மண்ணில் திராவிட முன்னேற்றக் கழகம் வேர்விட்ட இந்த 76 ஆண்டுகளில், தி.மு.க.வை வகுத்தால் தமிழ்நாடு! தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் தி.மு.க” என்று வளர்ந்திருக்கிறோம்.