2 வது நாளாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை
1 min read
Retired Judge Aruna Jagatheesan under intensive interrogation for the second day
29.9.2025
கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் 2வது நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தீவிர விசாரணை நடத்தினார். அவர் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று உறவினர்களிடம் விசாரித்து தகவல்கள் சேகரித்து வருகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை அருணா ஜெகதீசன் ஆணையம் சார்பில், ஐந்து பேர் கொண்ட குழுவினர், நெரிசல் ஏற்பட்டு பலர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்களிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 2வது நாளாக இன்று (செப் 29) ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார். சம்பவ இடத்தில் பொதுமக்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடம், மருத்துவமனை, உயிரிழிந்தவர்கள் வீடுகளுக்கு சென்றும் விசாரித்து வருகிறார்.
கரூர் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.