நவீன காமிரா மூலம் அரசு பணியாளர் தேர்வில் காப்பி அடித்த வாலிபருக்கு உதவிய நண்பர் கைது
1 min read
Friend arrested for helping youth cheat on civil service exam using modern camera
3.10.2025
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பெரளசேரி பகுதியை சேர்ந்தவர் முகமது சகத் (வயது 27). இவர் கடந்த 27-ந் தேதி கேரள அரசு பணியாளர் தேர்வாணைய (கே.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வை பையாரம்பலம் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் எழுதினார். அப்போது அவர் தனது சட்டையில் நவீன கேமராவை பொருத்தி, அதன் மூலம் வினாத்தாளில் இடம்பெற்ற கேள்விகளை படம் பிடித்து உள்ளார்.
அதோடு தேர்வு மையத்தின் வெளியே நண்பரை நிற்க வைத்து, அவருக்கு கேமரா மூலம் கேள்விகளை காண்பித்து, அதற்கான விடையை ஹெட்போன் மூலம் கேட்டு தேர்வு எழுதியது தெரியவந்தது. இதுதொடர்பாக கண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரசு பணியாளர் தேர்வில் காப்பி அடித்த முகமது சகத்தை கைது செய்தனர்.
மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டு தலைமறைவான நண்பரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். விசாரணையில் அவர் பெரலசேரி அருகே உள்ள முண்டல்லூர் பகுதியை சேர்ந்த சபீல் (24) என்பதும், முகமது சகத் தேர்வில் காப்பி அடிக்க தேர்வு மையத்துக்கு வெளியே நின்று வினாக்களுக்கு உரிய விடையை தெரிவித்து உதவியதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.