கரூர் சம்பவம்: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை
1 min read
Karur incident: Police question ambulance drivers
4.10.2025
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த 27ம் தேதி சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை சென்னை ஐகோர்ட்டு அமைத்துள்ளது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள், 3 ஏ.டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புலனாய்வு குழு கரூர் போலீசாரிடம் உள்ள கூட்ட நெரிசல் தொடர்பான கோப்புகளை பெற்று விசாரணையை தொடங்க உள்ளனர்.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் போலீசார் இன்று விசாரணை மேற்கொண்டனர். தவெகவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்களின் டிரைவர்கள், தனியார், அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ்களின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் ஏற்கனவே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ்களின் டிரைவர்கள், கூட்ட நெரிசலுக்குப்பின் வந்த அரசு, தனியார் ஆம்புலன்சுகளின் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கூட்ட நெரிசல் குறித்து அழைப்பு எப்போது வந்தது? , கூட்ட நெரிசல் குறித்து தகவல் கொடுத்தது யார்? எத்தனை மணிக்கு கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தீர்கள்? , உங்களுக்கு அழைப்பு விடுத்தது யார்? எத்தனை ஆம்புலன்சுகள் பயன்படுத்தப்பட்டன? உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பி ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.