சபரிமலையில் தங்க தகடுகள் 17-ந் தேதி மீண்டும் நிறுவப்படும்
1 min read
Gold plaques to be reinstalled at Sabarimala on the 17th
5.10.2025
சபரிமலையில் துவார பாலகர் சாமிசிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பியபோது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து 3 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க தேவஸ்தான லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பாதுகாப்பு தலைமை அதிகாரிக்கு கேரள கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
துவார பாலகர் சாமி சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளை புதுப்பிக்கும் பணிக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. திருவாபரணம் ஆணையரின் தலைமையில், தேவசம் லஞ்ச ஒழிப்பு துறை, சபரிமலை நிர்வாக அதிகாரி, தேவஸ்தான நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் தங்க கொல்லர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பான வாகனத்தில் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சென்னைக்கு எடுத்துச்செல்லப்பட்ட 12 சிற்பங்களின் தகடுகள் மொத்த எடை 24 கிலோ இதில் 281 கிராம் தங்கம் இருந்தது. சென்னையில் உள்ள நிறுவனத்தில் புதுப்பிக்கும் பணி செய்தபோது 10 கிராம் தங்கம் புதிதாக முலாம் பூசப்பட்டது. பின்னர், தங்கதகடுகளை சன்னிதானத்திற்கு கொண்டு வந்தபோது தகடுகளில் இருந்த தங்கத்தின் எடை 10 கிராம் அதிகரித்து மொத்தம் 291 கிராமாக இருந்தது. இந்த விஷயத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு மறைக்கவோ, மறுக்கவோ எதுவும் இல்லை. அதனால்தான் இந்த விஷயத்தில் விரிவான விசாரணை நடத்த தேவசம் போர்டு ஐகோர்ட்டை கேட்டுள்ளது. யாராவது தவறு செய்திருந்தால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தற்போது சன்னிதானத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் தங்க தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அவை ஐகோர்ட்டு மேற்பார்வையின் கீழ் கொண்டு வரப்பட்டு, வருகிற 17-ந் தேதி துலாமச பூஜைக்காக கோவில் திறக்கப்படும் போது மீண்டும் நிறுவப்படும். தலைமை அர்ச்சகர் முன்னிலையில் இந்த தங்க தகடுகள் நிறுவப்பட உள்ளன.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.