அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
1 min read
Indian student shot dead in America
5.10.2025
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் பொலே (வயது 27). இவர் ஐதராபாத்தில் இளநிலை பல் மருத்துவம் படித்தார். பின்னர், 2023ம் ஆண்டு அமெரிக்கா சென்ற அவர் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுநிலை பல் மருத்துவம் மேல் படிப்பு மேற்கொண்டு வந்தார்.
இதனிடையே, அவர் பகுதி நேரமாக டெக்சாசின் டெல்லஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், சந்திரசேகர் இரவு பெட்ரோல் பங்கில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் சந்திரசேகரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். இந்த துப்பாக்கி சூட்டில் சந்திரசேகர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சந்திர சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, உயிரிழந்த மாணவனின் உடலை இந்தியாவுக்கு கொண்டுவர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.