August 30, 2026

Seithi Saral

Tamil News Channel

தூத்துக்குடியில் வாலிபரைக் கொன்ற பழக்கடை உரிமையாளர் கைது

1 min read

Shop owner arrested for killing youth in Thoothukudi

12.10.2025
தூத்துக்குடி அழகேசபுரம் 1வது தெருவைச் சேர்ந்த உதயகுமார் மகன் சோலையப்பன் (வயது 23), கூலி வேலை செய்து வருகிறார். இவரது தாயார் இந்திராவுக்கும் அவரது அக்கா பரமேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டது. இருவரும் நடுரோட்டில் நின்று கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். அப்போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி வள்ளி சண்டையை விலக்கி விட்டாராம்.

அப்போது அங்கு வந்த சோலையப்பன், வள்ளியிடம் எனது அம்மா யாருடனும் சண்டை போடுவார்கள்; அதை கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்துவிட்டு போங்கள் என்று அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் அடைந்த வள்ளி இந்த சம்பவம் குறித்து தனது மகன் செல்வகுமார்(25) என்பவரிடம் கூறினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் வீட்டுக்குள் இருந்த சோலையப்பனை வெளியே வரவழைத்து அவரை சரமாரியாக கத்தியால் குத்தினாராம்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த சோலையப்பனை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வகுமார் அந்த பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மேலும் இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. கொலை செய்யப்பட்ட சோலையப்பனுக்கு திருமணம் ஆகவில்லை. கொலை குறித்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *