அதானிக்காக எல்.ஐ.சி. பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது -காங்கிரஸ் குற்றச்சாட்டு
1 min read
LIC policyholders’ savings being misused for Adani – Congress alleges
அதானி குழுமத்தின் நலனுக்காக எல்ஐசி பாலிசிதாரர்களின் சேமிப்பு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மோதானி (மோடி + அதானி) கூட்டு முயற்சியானது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தையும் (LIC) அதன் 30 கோடி பாலிசிதாரர்களின் சேமிப்பையும் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தியது என்பது குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
2025 மே மாதத்தில் பல்வேறு அதானி குழும நிறுவனங்களில் சுமார் ரூ.33,000 கோடி LIC நிதியை முதலீடு செய்வதற்கான திட்டத்தை இந்திய அதிகாரிகள் வரைவு செய்து செயல்படுத்தியதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் இலக்குகளாக அதானி குழுமத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துவது” மற்றும் “மற்ற முதலீட்டாளர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பது ஆகியவை அறிவிக்கப்பட்டன.
இந்த மோதானி மெகா மோசடி முழுமையையும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மட்டுமே விசாரிக்க முடியும் என்று கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது வருகிறது. இது தொடர்பாக 100 கேள்விகளை நாங்கள் எழுப்பியுள்ளோம்.
நிதி அமைச்சகம் மற்றும் நிதி ஆயோக் அதிகாரிகள் யாருடைய அழுத்தத்தின் கீழ், நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒரு தனியார் நிறுவனத்தை பிணை எடுப்பது என்று முடிவு செய்தனர்?
2024 செப்டம்பர் 21, அன்று அமெரிக்காவில் கவுதம் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, எல்ஐசி பங்குகள் நான்கு மணி நேர வர்த்தகத்தில் 7,850 கோடி ரூபாய் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது.
முதல் கட்டமாக, குறைந்தபட்சம் நாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழு (PAC), LIC எவ்வாறு அதானி குழுமத்தில் முதலீடு செய்ய நிர்பந்திக்கப்பட்டது என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.