திருநெல்வேலி: தொலைந்து போன 100 செல்போன்கள் மீட்பு
1 min read
Tirunelveli: 100 lost cell phones worth Rs. 17.82 lakhs recovered
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. முருகன் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமா தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், 100 செல்போன்கள் மீட்கப்பட்டு நேற்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.17 லட்சத்து 82 ஆயிரத்து 773 ஆகும்.
மேலும் காணாமல் போன அல்லது தவறவிட்ட செல்போன்கள் தொடர்பாக புகார் அளிக்க CEIR- Central Equipment Identity Register https://www.ceir.gov.in/ இந்திய தொலைத் தொடர்பு துறையால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் புகார்தாரர் தனது தொலைந்து போன அல்லது தவறவிட்ட செல்போன் தொடர்பான விவரங்களை பதிவு செய்து புகார் அளிக்கலாம். அல்லது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீது பதிவு செய்து புகார் அளிக்கலாம்.
இவ்வாறு புகார் கொடுத்தபின் மனுதாரர் செல்போன் வேறு ஒருவரால் பயன்படுத்த முடியாதவாறு Block செய்யப்படும். மேலும் மனுதாரர் செல்போனில் புதிதாக சிம்கார்டு பயன்படுத்திய விபரங்கள் தொடர்பான அறிவிப்பு மனுதாரருக்கு உடனடியாக அனுப்பப்படும். காணாமல் போன செல்போனை பயன்படுத்தி பல குற்றங்கள் செய்ய வாய்ப்பு உள்ளதால் தொலைந்த அல்லது காணாமல் போன செல்போன் குறித்து உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தால், தொலைந்து போன அல்லது உடனடியாக தவறவிட்ட செல்போனை மீட்க முடியும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் சைபர் குற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்; அல்லது https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 404 செல்போன்கள் மீட்கப்பட்டு, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளார் என திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையம் தெரிவித்துள்ளது.