மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம்: மு.க.ஸ்டாலின் வரவேற்பு
1 min read
Board Company is coming back: MK Stalin welcomes
31.10.2025
உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும்,வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார்.
இந்தநிலையில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம்
ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
அடுத்த தலைமுறை இஞ்சின்களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழ்நாட்டின் தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் நமது தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது! தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும்.
இவ்வாற அவர் பதிவிட்டுள்ளார்.