ராஜபாளையம் கோவிலுக்குள் 2 பேர் வெட்டிக்கொலை
1 min read
2 people hacked to death inside Rajapalayam temple
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்றிரவு காவலர்கள் இரண்டு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோவிலில் மர்மநபர்கள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயற்சி செய்ததாக தெரிகிறது. அவர்களை கோவில் காவலர்கள் தடுக்க முயற்சி செய்தனர். அப்போது, காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வெட்டி படுகொலை செய்யப்பட்ட காவலர்கள் பேச்சிமுத்து(வயது 50), சங்கரபாண்டியன் (65), என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட கோயில் காவலாளிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவிலில் உண்டியல் சேதமாகி இருப்பதால் மர்மநபர்கள் கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவிலில் பழமை வாய்ந்த சிலைகள், நகைகள் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்து மதுரை சரக டி.ஐ. ஜி., அபினவ் குமார், எஸ். பி., கண்ணன் தலைமையில் போலீசார் முதல் கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் காவலர்கள் இருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.