மிகப்பெரிய வெற்றி மூலம் பீகார் மக்கள் வரலாற்றை உருவாக்கியுள்ளனர் – அண்ணாமலை பெருமிதம்
1 min read
The people of Bihar have created history with a huge victory – Annamalai Pride
பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், பீகாரில் தே.ஜ. கூட்டணியில் வெற்றி குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியை பீகார் மக்கள் அளித்து வரலாற்றை உருவாக்கியுள்ளனர். பிரதமரின் தலைமை, நிதிஷ்குமாரின் ஆட்சி மீது பீகார் மக்கள் மகத்தான நம்பிக்கை வைத்துள்ளதை தேர்தல் வெற்றி உறுதி செய்துள்ளது.
இந்த வெற்றி, பீகாரின் ஒவ்வொரு சகோதர சகோதரியும் எதிர்கால வளர்ச்சி மீது வைத்திருக்கும் நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அதிகாரமளித்தல், செழிப்பு மற்றும் ஒற்றுமைக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுதிப்பாடு, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவிலும் எதிரொலித்துள்ளது, இந்த முடிவு, குறுகிய, பிரிவினைவாத மற்றும் சந்தர்ப்பவாத அரசியலை விட முன்னேற்றம், நல்லாட்சி மற்றும் தேசிய நலன் எப்போதும் மேலோங்கும் என்ற செய்தியை நாட்டிற்கு அளிக்கிறது.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.