கள்ளக்காதலனுடன் பைக்கில் வந்த மனைவியை கொன்ற கணவன்
1 min read
Husband kills wife who came on bike with smuggler
20.11.2025
திருவண்ணாமலை, கொடிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (56 வயது). இவரது மனைவி சுலோச்சனா (55 வயது). இருவரும் சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில் சுலோச்சனாவுக்கு, வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனை அறிந்த ராஜா, மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை சொந்த ஊர் செல்வதற்காக ராஜா, போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மனைவிக்காக காத்திருந்தார். அப்போது அவரது மனைவி சுலோச்சனா, தனது கள்ளக்காதலன் வேதநாயகத்துடன் பைக்கில் அங்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜா, பையில் வைத்திருந்த சுத்தியலை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
இதையடுத்து சுலோச்சனாவுடன் வந்த வேதநாயகம் மற்றும் அவரது நண்பர்கள், ராஜாவை சரமாரியாக தாக்கியதில் அவரும் காயம் அடைந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி சுலோச்சனா பரிதாபமாக உயிரிழந்தார். ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ராஜா மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.