ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் என பரவும் வதந்தி
1 min read
Rumor has it that every citizen will get Rs. 30,000.
19.12.2025
சமீபகாலமாக டிஜிட்டல் மோசடி குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசி, கடவு சொற்களை பெறுவதும், சிறிது நேரத்திலேயே கணக்கில் இருந்த பணத்தை சூறையாடுவதும் தொடர்கதையாகி விட்டது. இதை தடுக்க ‘சைபர்’ கிரைம் போலீசார் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுடன், விழிப்புணர்வுடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், ‘மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்’ என்ற பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் “மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். 2025-ம் ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால், இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடையும். எனவே தயவுசெய்து கீழே உள்ள லிங்கை உடனடியாக அழுத்தி உங்கள் தொகையைப் பெறுங்கள். இந்த வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கும் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இது போலியானச் செய்தி. வதந்தியைப் பரப்பாதீர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.