காவல் துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை: உயர் நீதிமன்றம் அதிருப்தி
1 min read
High Court expresses dissatisfaction over lack of orderlies in police department
19.12.2025
காவல்துறையில் ஆர்டர்லிகள் இல்லை என்பதை ஏற்க முடியவில்லை என்று சென்னை ஐகோர்ட் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கோவில் நிலத்திற்கும், தமக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் கோரி சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, ஆர்டர்லிகள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவு முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பது நீதிமன்றம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து டிஜிபி தரப்பில், அதற்கு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. எந்த காவல்துறை அதிகாரிகள் தரப்பிலும், ஆர்டர்லிகள் யாரும் இல்லை என்று அப்போது அறிக்கையும் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கானது, இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து கமிஷனர்கள், எஸ்.பி.க்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியதை இருவரும் பாராட்டினர். அதே நேரத்தில், ஆர்டர்லிகளாக சீருடை காவலர்கள் பணியாற்றி வருவதாக செய்தித்தாள்களிலும், பொது தளங்களிலும் தகவல் பரவி வரும் நிலையில், யாரும் இல்லை என்று டிஜிபி கூறுவதை ஏற்க முடியவில்லை என்று கூறினர்.
அதற்கு அரசின் தரப்பில் பதிலளித்த தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, ஆர்டர்லிகள் இருப்பது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோரை இணைத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஜன.7ம் தேதிக்கு அவர்கள் தள்ளி வைத்தனர்.
ஆட்சியே முடியப்போகுது… வாக்குறுதி நிறைவேற்றாத திமுக அரசு; அண்ணாமலை கண்டனம்
சென்னை: ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், செவிலியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை; பணி நிரந்தரம் கோரி, சென்னை சிவானந்தம் சாலையில் போராட்டம் நடத்திய 1,500 க்கும் மேற்பட்ட செவிலியர்களை, மாலையில் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில் கொண்டு போய் விட்டிருக்கிறது திமுக அரசு. இதனால், அதிகாலை நான்கு மணி வரை, கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டில், செவிலியர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கிறார்கள். திமுக அரசின் இந்த அராஜகப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
திமுக தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதி எண் 356 ல், தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்களும், செவிலியர்களும், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறியிருந்தது.
ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாவது ஆண்டு முடியப் போகும் நேரத்திலும், இந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில், தங்கள் உயிரைக் குறித்துக் கூடக் கவலைப்படாமல், பொதுமக்கள் நலனுக்காக முன்னின்று பணியாற்றியவர்கள் மருத்துவர்களும், செவிலியர்களும்.
நான்கரை ஆண்டுகளாக, தங்களைப் பணி நிரந்தரம் செய்ய, அவர்கள் கோரிக்கை வைக்காத இடமே இல்லை. ஆனால், திமுக அரசு, அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. செவிலியர்கள் கேட்பது, ஆட்சிக்கு வருவதற்காக திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றத்தான். அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்து, அவர்கள் கோரிக்கைகளை கேட்டுக்கொள்ளும் அடிப்படை மரியாதையைக் கூட, சுகாதாரத்துறை அமைச்சர் கொடுக்க மறுக்கிறார் என்பது, பொதுமக்களை திமுக எப்படி நடத்துகிறது என்பதற்கு உதாரணம்.
கடந்த 2023ம் ஆண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 2,472 செவிலியர்களைப் பணிநீக்கம் செய்ததை நாம் கண்டித்துக் குரல் கொடுத்திருந்தோம். தமிழகம் முழுவதும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர்களின் கோரிக்கைக்கு எப்போதும் துணை நிற்போம். செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.