போதைப் பழக்கத்தில் இருந்து மக்களை காத்திட தோரணமலையில் கூட்டுப்பிரார்த்தனை
1 min read
Collective prayer at Thoranamalai to protect people from drug addiction
3.1.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் சித்தர்களும் முனிவர்களும் வழிபடப்பட்ட இக்கோவிலில் மாதாமாதம் பவுர்ணமி தோறும் கிரிவலம் நடப்பது வழக்கம் மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் இன்று(3.1.2026) நடைபெற்றது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் 6.30 கிலோமீட்டர் தூரம் உள்ள கிரிவல பாதையில் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிரிவலம் வந்தனர்.
பின்பு உலக நன்மைக்காக பக்தர்கள் இணைந்து கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.
கூட்டு பிரார்தனையில், “ அனைத்து தளங்களிலும் நம் தாய்த்திரு நாடான இந்தியா தன்னிறைவு பெற்று வல்லரசாக மாறிட அருள்வாய் தோரணமலை முருகா.. நாட்டு மக்களிடையே சமத்துவம், சகோதரத்தை வளர்த்து, விட்டுக்கொடுத்து போகும் மனநிலை தந்தருள்வாய் முருகா.. பெற்றோரை பிள்ளைகள் பேணி காத்திட அருள்வாய் முருகா.. நமது பகுதி பீடித் தொழிலாளர்களின் உடல்நலம் காத்து மன நிம்மதியோடு வாழ அருள்வாய் தோரணமலை முருகா.. நாட்டில் விவசாயம் தழைத்து விவசாயி செழிக்க தேவையானதை தந்தருள்வாய் தோரண மலை முருகா.. போதைப் பழக்கத்தில் இருந்து மக்களை காத்து மேதை என பெயர் வாங்கும் பாதையில் சென்றிட அருள்வாய் முருகா…இங்கு கூடியிருக்கும் தோரணமலையானின் தெய்வீக உறவுகளின் பிரார்த்தனை நிறைவேற அருள்வாய் முருகா.. தோரணமலை திருக்கோவிலின் திருப்பணிக்கு உதவிடும் அனைவரையும் அரவணைத்துக் காப்பாய் முருகா” என வேண்டப்பட்டது.
இதனையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. காலை மதியம் அன்னதானம் நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை தோரணமலை முருகன்கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ.செண்பகராமன் செய்திருந்தார்.