முத்துமாலைபுரம் மாணவ-மாணவிகளுடன்கனடா முருக பக்தர் கலந்துரையாடல்
1 min read
Canadian Muruga devotee talks with Muthumalaipuram students
5.1.2026
தென்காசி மாவட்டம், தென்காசி ஊராட்சி ஒன்றியம்
முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பகத்திற்கு கனடா நாட்டு முருக பக்தர் கேதர்நாதன் சுப்பிரமணியன் வருகை தந்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தென்காசி – கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் பரம்பரை அறங்காவலரான மறைந்த கே.ஆதிநாராயணனின் சொந்த ஊரான முத்துமாலைபுரத்தில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் கிராமப்புற மாணவ, மாணவிகள் படிப்பதற்காக ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு மாலை நேர கட்டணமில்லா படிப்பகம் செயல்பட்டு வருகிறது.
இதில் அரசு பள்ளிகளை சேர்ந்த 102 மாணவ, மாணவிகள் கட்டணமின்றி படித்து வருகின்றனர். இதே போல் கிராமப்புற மாணவ, மாணவிகளுக்காக அங்கு ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு விளையாட்டு மைதானமும் அமைந்துள்ளது.
இந்நிலையில் தோரணமலை ஸ்ரீமுருகன் கோவிலுக்கு ஆங்கில புத்தாண்டு அன்று கனடாவை சேர்ந்த முருக பக்தர் கேதர்நாதன் சுப்பிரமணியன் என்பவர் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார்.
அப்போது முத்துமாலைபுரம் மாலை நேர படிப்பகம் குறித்து கேள்விப்பட்ட அவர், முத்துமாலைபுரத்திற்கு நேரில் வருகை தருவதாக தெரிவித்தார். அதன்படி மாலை நேர படிப்பகம் வந்த அவருக்கு மாணவ, மாணவிகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
அப்போது மாணவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். தமிழ்நாடும், தமிழ் மக்களின் அன்பும், கலாச்சாரமும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளது என்றும், இங்கு கிடைக்கும் இட்லி, பூரி போன்ற உணவுகள் ரொம்ப பிடித்திருப்பதாகவும் தெரிவி;த்தார். இதற்கு மாணவர்கள் தாங்கள் மீண்டும் தங்கள் படிப்பகத்திற்கு வர வேண்டும் என்றும், அப்போது தங்களுக்கு பிடித்த உணவினை வழங்குவதாகவும் தெரிவித்தனர். இதனால் மகிழ்ச்ச்சியடைந்த அவர், இங்கு நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் தோரணமலை முருகன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக இறைபணி செய்து வரும் ஆதிநாராயணன் குடும்பத்தினரின் சேவையை பாராட்டிய அவர் கிராமப்புற மாணவ, மாணவிகளின் கல்வி திறன் மற்றும் அன்பு தன்னை வெகுவாக கவர்ந்துள்ள தாகவும் அவர்களுக்கு ஆங்கி;லம், பிரெஞ்ச் மொழி கற்றுத்தருவதாகவும் தெரிவித்தார்.