இடைகால் பகுதியில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்புச் சுவரை அகற்ற கோரிக்கை
1 min read
Request to remove the barrier wall causing accidents in the Idakal area
5.1.2026
தென்காசி மாவட்டம் தென்காசி மதுரை சாலையில் உள்ள இடைகால் துரைச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர் விபத்துகளுக்கு காரணமான சாலை ஓரம் உள்ள தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர் டேனி அருள்சிங் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
தென்காசி – மதுரை நெடுஞ்சாலையிலுள்ள இடைகால் – கடையநல்லூர் துரைச்சாமிபுரம் சாலையில் சேவை ரோட்டிற்காக போடப்பட்டுள்ள தடுப்பு சுவரால் அப்பகுதியை கடக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும் கடந்து செல்லும் பொதுமக்களுக்கும் மிகுந்த குழப்பம் ஏற்படுவதால் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டுவருகிறது.
இதனால் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டதோடு கடந்த நவம்பர் 24 ம் தேதி இதே இடத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். 50 க்கும் மேற்ப்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அதே இடத்தில் நடந்த விபத்தில் தென்காசி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் மற்றும் அவரது இரு மகன்களும் பலியானார்கள் அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த இரண்டு விபத்துக்களுக்கும் காரணம் இடைகால் – துரைச்சாமிபுரம் பகுதியில் சாலையின் இருபுறத்திலும் உள்ள தடுப்புச் சுவர் தான் காரணம் என்று அந்த பகுதி பொதுமக்கள் கூறிவருகிறார்கள். அந்த தடுப்புச் சுவரால் வாகனங்கள் ஓரமாக செல்ல முடியாதது தான் தொடர் விபத்திற்கு காரணம்.
எனவே இருபுறமும் உள்ள சாலை தடுப்பு சுவர்களை அப்புறப்படுத்தி விட்டு அதற்கு பதிலாக அனைத்து சாலையில் உள்ளது போல் சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்து, பாதுகாப்பான பயணத்தை அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலரும் ,தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மையினர் நலத்துறை இணைச் செயலாளருமான டேனி அருள் சிங் , அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் நெ விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்த கோரிக்கை மனுவை கொடுத்த போது அவருடன் இடைகால் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் செல்லப்பா , விவசாய சங்க நிர்வாகி விக்கி ஆகியோர் உடன் இருந்தனர்.