உத்தரபிரதேசத்தில் முகங்களை மூடினால் நகைக்கடைகளில் அனுமதி இல்லை
1 min read
In Uttar Pradesh, people with faces covered are not allowed in jewelry stores
6.1.2026
நாடு முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் சிப்ரி பஜார் பகுதியில் நகைக்கடைகளை நடத்தி வரும் நகைக்கடைக்காரர்கள் தங்களுடைய கடைகளில் வாடிக்கையாளர்கள் பார்க்கும்படி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.
அதில், தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்து வருகிறது. இதனால், திருட்டு சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க, கடைக்கு வருகிற வாடிக்கையாளர்கள் முகங்களை மூடாமல் வர வேண்டும். முகங்களை மூடியபடி வருபவர்களை கடைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்து உள்ளனர்.
இதுபற்றி சிப்ரி பஜாரின் தலைவர் உதய் சோனி கூறும்போது, நாங்கள் புதிதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளோம். எங்கள் கடைகளுக்கு வரும் அனைவரும் ஷாப்பிங் செய்யும்போது தங்கள் முகங்களை மறைக்காமல் இருக்க வேண்டும் என்று நாங்கள் சிறப்பு கோரிக்கையாக கேட்டு கொள்கிறோம்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து உள்ளது. அதனால், கட்டுப்பத்தப்படாத நபர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரித்து வருகிறது. எங்கள் கடைகளில் கேமராக்களை நிறுவும்படி அரசும், நிர்வாகமும் எங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அதனால், அனைவரும் எங்களுக்கு ஆதரவளியுங்கள் என கூறினார்.