அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை – நயினார் நாகேந்திரன் பேட்டி
1 min read
I did not pressure AIADMK for a place in the cabinet – Nayinar Nagendran
10.1.2026
சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க., 56 தொகுதிகளும், அமைச்சரவையில் பங்கும் கேட்டு அழுத்தம் கொடுப்பதாக தகவல் பரவியது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, அவரிடம் இவ்வாறு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கோவை வந்த தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சராக வருவார்.
அமைச்சரவையில் இடம் கேட்டு நாங்கள் அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. தே.மு.தி.க. கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாக கூறியிருக்கிறது. அதன்பிறகு, எங்கள் கருத்தை தெரிவிக்கிறேன்.
எங்கள் கூட்டணிக்கு முதலில் அன்புமணி ராமதாஸ் வந்திருக்கிறார். இன்னும் நாள் இருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.